விதியின் பயணம்…

•ஜனவரி 27, 2009 • 1 மறுமொழி

payanangal-mudivathillai41

பரபரவென வேகமாக வீட்டினுள் நுழைந்து என் துணிகளை அடுக்கத் துவங்கினேன். 10.30 மணி bus-க்கு இவ்வளவு லேட்டாகவா கிளம்பறது. இன்னும் ஏகப்பட்ட traffic தாண்டி கோயம்பேடு போய் ஏற்றதுக்குள்ள ஒரு வழியாகிடுமே. மனசு படபடத்தது. நாலு மாசமா ஊருக்கு வேற போகலியா, அம்மா ரொம்ப ஆவலா காத்துட்டு இருப்பாங்க.மொத்தமா சேர்ந்தாப்ல 3 நாள் லீவ் கிடச்சிருக்கு, அதுவும் எந்த project tension-ம் இல்லாம, பயங்கரமா plan பண்ணி போட்டிருக்குற லீவ். ம்ம்…வீணாகிடக்கூடாதே….இதுவும் மனசோட புலம்பல்தான். கொஞ்சம் tension இல்லாம நிதானமா கிளம்பி இருக்கலாம், ஆனா கடைசி நிமிஷத்துல இப்படி onsite call வச்சு என்னை இம்சை படுத்துவாங்கன்னு நினைக்கவே இல்லை. சரி எல்லாம் என் நேரம்தான், இப்பவாவது கிளம்பினோமேன்னு இருக்கு…”மணி, bike சாவி என் பழைய pant pocket-ல இருக்கு. எங்கயும் தேடாதடா…நாளைக்கு மறக்காம break மட்டும் adjust பண்ணி வச்சிருடா, please….” ஆர்வமா T.V பார்த்துட்டு இருந்த மணியிடம், உரக்க கத்திக்கொண்டே கிளம்பினேன். Bag-ஐ முதுகில் மாட்டிக்கொண்டு டைம் பார்க்கையில் சரியாக 9 ஆனது. புரசைவாக்கத்திலிருந்து கோயம்பேடு போக எவ்வளவு நேரம் ஆகுமோ…auto-வின் வரவை நோக்கி தெருமுனையில் நின்றேன். அப்படியே, auto வந்தாலும், மதுரைக்கு bus-ல போற காசை, இங்கிருந்து கோயம்பேடு போவதற்க்கு கேட்டுத் தொலைப்பான். அதை நினைக்கவே எரிச்சலாக இருக்கு. என்ன பண்றது, நம்ம
அவசரத்துக்கு குடுத்துதான் ஆகணும். யோசித்துக் கொண்டே நடந்தேன். vrooooom….சரேலென்று வந்து நின்றது ஒரு auto.

“sir, எங்க போகணும்?” auto driver கேக்கும்போதே, குப்பென்று தண்ணி அடிச்ச நாற்றம் வீசியது.

“கோயம்பேடு போகணும்பா, எவ்வளவு கேக்கற?”

“sir, நைட் டைம் ஆகிடுச்சு, ரிடர்ன் சவாரி கிடைக்காது, 150 ரூபாய் குடுத்திடுங்க போதும்..” கடுப்பானேன். ஹ்ம்ம்..நம்ம நேரம், லேட்டா கிளம்பினது என் தப்பு. குடிகாரனிடம் பேரம் கூட பேச முடியாது. மனசு நொந்து ஏறிக்கொண்டேன்.

“வேகமா போப்பா..” வார்த்தைகளின் வேகம் பார்த்து driver யோசித்திருப்பான், 200 ரூபாய் கேட்டிருக்கலாமோ, என. என்னைப் பார்த்த பார்வை அப்படித்தான் இருந்தது. தண்ணி அடிச்சிருந்ததாலோ என்னவோ, வேகமாகவே ஓட்டினான். கோயம்பேடு வரும்போது 10 20 ஆகி இருந்தது. 150 ரூபாய் நீட்டி, ஓட்டம் பிடித்தேன். மூச்சிரைக்க, கூட்டத்தை தள்ளைவிட்டு, நான் reserve பண்ணி இருக்கும் மதுரை bus-ஐ கண்டுபிடிக்க பெரும்பாடு ஆகிறது. 23-ம் platform-ல் 2-வது வண்டியாக, நின்றது. கண்ணாடியில் 10 30 என எழுதி இருந்தது. conductor-ரிடம் விரைந்தேன்.
“Sir, 10 30 வண்டிதானே இது?” வேர்த்து விருவிருத்து கேட்டேன்.
“ஆமாம்” ஒற்றை வார்த்தை பதில்தான். பின்ன, உக்கார்ந்து சம்மந்தி விருந்தா கேட்க முடியும். இந்த நேரத்திலையும், அலப்பரை தாங்க முடியலை. என் டிக்கட் காண்பித்து, bag-உடன், சீட்டுக்ப் போனேன். 12-ம் நம்பர் சீட் பார்த்து, மேலே பையை போட்டுட்டு, ஜன்னலருகில் உட்கார்ந்து கொண்டேன். ஒரு பெரிய நிம்மதி பெருமூச்சு விட்டேன். அப்பா, bus-ஐ பிடிச்சாச்சு, காலைல 5 30 மணிக்கெல்லாம் ஊர் போய் சேர்ந்திடலாம். நினைக்கவே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஹ்ம்ம்…ஆனாலும், அவ்சர அவசரமாக கிளம்பியதில், எதையோ விட்டுட்டு வன்ந்த மாதிரியே இருக்கு. வாட்ச், மொபைல், சார்ஜர், பர்ஸ், அம்மாவோட புது சாரி….ஹ்ம்ம்..என்னவா இருக்கும், ஒன்னும் தோனலை. சரி அப்படியே விட்டிருந்தாலும் என்ன
அமெரிக்காவா போரோம், மதுரைக்குத்தானே, அங்க வாங்கிக்கலாம். பக்கத்து சீட்ல யார் வரப்போராங்கலோன்னு ஒரு நினைப்பு. அடடா, யாரும் தண்ணி போட்டுட்டு ஏறிடக்கூடாது, குறிப்பா, தம் அடிக்கரவன் பக்கத்துல வந்திடக்கூடாது. அதை நினைச்சா இன்னும் எரிச்சலாதான் இருக்கு. சே, 2 மாசத்துக்கு முன்னாடியே plan பண்ணிட்டாலும் train டிக்கட் கிடைக்காம போய்டுச்சேனு கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு. வேற வழி
இல்லாமதான் bus-ல எடுக்க வேண்டியதாகிற்று. பண்டிகை நாள்கூட இல்லை, அப்பறம் என்னதான் கூட்டமோ தெரியலை. மக்கள் எங்கதான் போவாங்களோ, வருவாங்களோ, ஒரு நாள் போறதுக்கே நமக்கு இவ்வளவு வலிக்குதே, எப்படித்தான் சலிக்காம சில பேர் travel பண்றாங்களோ. ஆச்சரியமாத்தான் இருக்கு. 10 35 ஆகிடுச்சு, இன்னும் வண்டியை எடுக்கலையே…இறங்கிப் போய் conductor-ரிடம் கேட்கலாம்,
“எத்தனை மணிக்கு எடுப்பீங்க?”
என்னை மேலும் கீழும் முறைச்சு பார்த்துட்டு, “11.15 ஆகும்”. மறுபடியும் ஒற்றை வார்த்தை…
அச்சோ, 11 15-ஆ, இதுக்கு நான் மெதுவாவே கிளம்பி இருக்கலாம், சாப்பிடாம கொல்லாம, auto-க்கு அநியாயத்துக்கு தெண்டமா 150 ரூபாய் குடுத்து, அரக்க பரக்க ஓடி வந்ததுக்கு, இது நல்ல வேனும். ரொம்ப ரொம்ப்ப வெறுத்துப் போனேன். bus stand-ல எதுவும் வாங்கி சாப்பிடரதுக்கும் வழியில்ல. பசி வயிற்றில் கொடி கட்ட ஆரம்பித்தது. பக்கத்தில் ஒரு டீக்கடையில், ஒரு பிஸ்கட் பாக்கெட்டும், ஒரு சின்ன பாட்டில் தண்ணீரும் வாங்கிட்டு வந்தேன். அம்மாவிடம் சொல்லிடலாம். phone-ல் அம்மாவை அழைத்தேன்….

“அம்மா, bus ஏறிட்டேன், காலைல 6 30 – 7 மணிக்கெல்லாம் வந்திடுவேன். சொளந்தர், bus stand-க்கு வரவேண்டாம்னு சொல்லிடு. நானே வந்திடறேன். நல்ல பனியா இருக்கு. பெரியார் bus stand வந்ததும் ஒரு மிஸ்டு கால் குடுக்கறேன் சரியா?”
“கண்ணா, சாப்பிட்டியா ஏதாவது, அவசர அவசரமா வந்திருப்பியே?”
நேரில் பார்த்ததுபோல் அம்மா கேட்டது, அம்மாவின் நினைப்பை மேலும் தூண்டுவதாக இருந்தது.
“சாப்பிட்டேன் மா, நீ நல்ல தூங்கு, காலைல பார்ப்போம்…” பேசி முடித்தாயிற்று. phone – ஐ பாக்கெட்டில் வைத்து, இருக்கையய் நன்றாக சாய்த்தேன். பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்தேன். நிதானமாக சாப்பிட ஆரம்பித்தேன். நினைவுகள் எல்லாம் ஊரைச் சுற்றியே இருந்தது. எத்தனை நாளாச்சு, அம்மா கையால சாப்பிட்டு, அம்மா மடி மீது தூங்கி….நினைக்கவே சந்தோஷமாக இருந்தது. bus எப்ப எடுத்த என்ன, நாம தூங்க வேண்டியதுதான். ரொம்பவே அசதியானதால், கண்கள் மூடுவதை தடுக்க முடியவில்லை. ஆனாலும், மனசுல ஏதோ ஒன்னு தடுத்துக்கிட்டே இருக்கு. எதையோ மறந்தது மாதிரி, திரும்ப ரூமுக்கு போகணும்னு ஒரு உணர்வு.

எல்லாத்தையும் மறந்து, ஊருக்குப் போறதுக்குல்ல, ஒரு நல்ல தூக்கம் போட்டுடனும். கவனம் எங்கயோ திசை திரும்ப ஆரம்பிக்குது. மேல்னோக்கிய பார்வை அப்படியே நிலாவிடம் போனது. நிலவின் ஒளி இன்னிக்கு கொஞ்சம் அதிகமோ, ரொம்ப முறைப்பா இருக்கறமாதிரி தோணுது. கண்ணுக்கு குளிர்ச்சியா இல்லாட்டாலும், அதோட அழகு கொஞ்சம் பிரமிப்பாவே இருக்கு. சும்மாவ கவிஞர்களெல்லாம் நிலவைத் தளமா வச்சு கவிதை எழுதறாங்க. ஹ்ம்ம்..இவ்வளவு அமைதியா, பொறுமையா, ஆர்வத்தோட, நான் இது வரைக்கும் நிலாவை ரசிச்சதே இல்லை.

என்னமோ பார்த்துக்கிட்டே இருக்கச் சொல்லுது அதோட அழகு. கொஞ்சம் என்னோட ஞாபகம் பின்னோக்கிப் போக ஆரம்பிக்குது. நாலு மாசத்துக்கு முன்னாடி நான் ஊருக்குப் போனப்ப, செம்பா ஆச்சி பன்ன கூத்து அத்தனையும் மனசுல ஓடுது. வீட்டுக்குள்ள நான் காலடி எடுத்து வச்சதுதான் தாமதும், அதுவரைக்கும் வம்பு பேசின ஆச்சி, என்னைப் பார்த்ததும் சட்டென சப்த நாடியும் அடங்கிப் போனாள். அந்த தெருவிலையே வளவளன்னு, பல்லு போனாலும் சொல்லு போகாம பேசிட்டு இருக்கறது எங்க செம்பா ஆச்சிதான். ரொம்ப நல்ல குணம் அவளுக்கு. எல்லாருக்கும் நிறைய உதவி பண்ணுவாள். கொஞ்சம் மருத்துவம் பண்ணுவாள், நிறைய பாடுவாள். இந்த வயசுலயும், ஒத்த ஆளா, அவ்வளவு ருசியா கைமுறுக்கு செஞ்சிடுவா. நிறைய பேர் அவங்க வேட்டுல ஏதாவது விசெஷம்னா, எங்க ஆச்சியைதான் கூப்பிடுவாங்க. தாத்தா இல்லைன்னு அமங்கலமா நினைக்க மாட்டாங்க. ஏதோ ஒரு காந்த சக்தி ஆச்சிக்கு இருக்குன்னு நினைக்கிறேன். அதனாலதான் இன்னமும் அவளை எல்லாருக்கும் பிடிக்குது. சின்ன சின்ன வலிகள் தவிர, இதுவரைக்கும் பெருசா எந்த நோயும் சீண்டிப் பார்த்ததில்லை. நான் இன்னும் நாலு வருஷம்
உயிரோட இருப்பேன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாள். ஹ்ம்ம்..நினைவு மருபடியும் என் வரவின் வாசலில்….

என்னை அப்படியே கொஞ்ச நேரம் உத்து பாத்துட்டே இருந்தாள் எங்க ஆச்சி. “நல்லா இருக்கியாப்பா?” அவ்வளவுதான் கேட்டாள். எதுவும் பதில் எதிர்பார்த்த மாதிரி இல்லை…மறுபடியும், “குளிச்சிட்டு, சாப்பிட்டுட்டு வாப்பா, நாம பேசலாம்” நகர்ந்த்து கொண்டே பேசினாள். பதிலுக்கு காத்திருக்காமல், அவள் படுக்கைக்கு போய் படுத்துக்கொண்டாள். “ஏம்மா, ஆச்சிக்கு என் மேல ஏதாவது கோவமா? ஏன் இப்படி போறா?” அம்மாவிடம் விசாரித்தேன்.
“அவளை விடுடா, இப்பதானே வந்திருக்க. அப்பறம் போய் பேசு. என்னாச்சுனு நீயே கேட்டுக்கோ. வயசானாலே இப்படித்தான். புத்தி
பேதலிச்சுடும்” அம்மா பெருசா கண்டுக்கலை. நானும் சாப்பிட்டு முடித்தேன். ஆச்சியிடம் போனேன். நன்றாக தூங்கிக்கொண்டுதான் இருந்தாள்.

தொந்தரவு செய்ய மனசில்லாமல், அம்மாவிடம் பேச ஆரம்பித்தேன்.
“இன்னும் 6 மாசத்துல உன்னோட கல்யாணத்தி முடிச்சிடணும்ப்பா, அப்பா தீவிரமா பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்த 6 மாசம் விட்டாச்சுன்னா, அப்பறம் 3 வருஷம் ஆகுமாம், ஜாதகம் பார்த்துட்டு சொன்னாங்க. ரெண்டு இடம் வந்திருக்கு, உனக்கு எது விருப்பம்னு சொல்லு. ஒரு பொண்ணு திருநெல்வேலி, இன்னொரு பொண்ணு கோவில்பட்டி. ரெண்டு பேரும் நல்ல படிச்சிருக்காங்க.” பேசிக்கொண்டே photo காட்டினாள் அம்மா. நானும் இசைவாய் பார்க்க ஆரம்பித்தேன்.

அப்போதுதான், ஆச்சி திடீரென்று கத்த ஆரம்பித்தாள், “சங்கரா, சக்தி வரப்போறாடா, சக்தி வரப்போறா. உனக்குத் துணையா அவ
இருப்பாடா….நல்ல தெம்பா இரு. உனக்கு ஒரு வேலை வச்சிருக்காடா அவ..மறுக்காம நீ செய்யணும்…சக்தி வரப்போறாடா, சக்தி வரப்போறா…”

அப்படியே தூக்கி வாரிப்போட்டது எல்லாருக்கும். அவ்வளவு பெரிய குரலில் எங்க ஆச்சி பேசிப் பார்த்ததே இல்லை. திடீர்னு தூக்கத்துல கத்த ஆரம்பிச்சதும், பதறி அடித்து எல்லாரும் போய் பார்த்தோம். திரும்ப திரும்ப சக்தி வரப்போறா, சக்தி வரப்போறான்னே புலம்பிக்கிட்டு இருந்தாள்.

எங்களுக்கு ஒன்னும் புரியலை. அப்பறம் தானாவே அடங்கிப் போஇ, மறுபடியும் தூங்க ஆரம்பிச்சுட்டா. நாந்தான் ரொம்ப மிரட்சி ஆகிட்டேன். அம்மாவைப் பார்த்த்போது, ரொம்ப மெனக்கெடாமல், இயல்பாய் இருந்தாள். “வயசானாலே வாய் சும்மா இருக்காது. ஏதாவது புலம்பிட்டே தான் இருக்கும். விடுடா, உன்னோட கல்யாணத்தைதான் அப்படி சொல்றா” அம்மா ஒரு முடிவுக்கு வந்துட்டா. அதுசரி, கூடவே இருப்பவர்களுக்குத்தான் தெரியும் என்ன சங்கதி என்று. நானும் நினைத்துக் கொண்டேன், கல்யாணம் பன்னா, ஒரு வேலையா தருவா சக்தி, ஹ்ம்ம்..பல வேலையைத் திணிப்பாள். என்ன செய்றது, அதுவும் கடந்து போகும்னு, வாழ்க்கையை அழகா எத்துக்கணும். அதுக்கப்பறத்திலிருந்து, ஆச்சி என்கிட்ட ரொம்ப பிரியமா பேச ஆரம்ப்பிச்சுட்டா. நான் ஊர்ல இருக்கற வரைக்கும் எனக்கு ஒரே புத்திமதி. சாமி கும்பிடு தினமும். விபூதி வச்சிகோ. நல்ல சாப்பிடு, தெம்பா இரு, மனசோர்வு அடையாத…தைரியமா இரு..இப்படி ஏக வசனம். எங்க ஆச்சி எனக்கு இவ்வளவு புத்திமதி சொன்னதே இல்ல. சரி கல்யாணத்திற்க்குதான் என்னை தயார் படுத்தரா போலிருக்கு.

ஹ்ம்ம்…”சார், கொஞ்சம், ஜன்னலைத் திறந்துவிடுங்களேன்…” பின்னாடி சீட்-டிலிருந்து ஒரு குரல் என் நினைவை மீண்டும் bus-குள் திருப்பியது. இறுக்கமாய் மூடியிருந்த ஜன்னலை முழுதாகத் திறந்தேன். இந்த முறை ஆச்சி என்ன சொல்லப் போறாளோ….என்ன சொன்னாலும் அவ மனசு நோகாம, சரின்னு மண்டையை ஆட்டிடனும்….மனசு சொல்லுது. அடடா, எவ்வளவு நினைவுகள். மனசு ஒரு நிமிஷத்துல எங்கெல்லாமோ, எவ்வளவு
தூரமோ போய்ட்டு வந்திடுதே…மறுபடியும் நிலவைப் பார்த்துட்டே தூங்க ஆரம்பித்தேன். driver bus-ஐ கிளப்பியாச்சு. மெலியதாய், ஒரு புது பாடல் மனதை வருடிச் சென்றது. எனக்குப் பக்கத்தில் இது வரைக்கும் யாரும் ஏறவில்லை. தாம்பரத்தில்தான் ஏறுவார்கள் போலும். மொத்தம் 4 சீட்தான் காலியா இருக்கு. மறுபடியும் தூங்க ஆரம்பித்தேன். கோயம்பேடு விட்டு மெதுவாக புறப்பட்டது என் வண்டி. சரியாக, 11.15 ஆனது. காலை 6.30 – 7.00 மணிக்கெல்லாம் சேர்ந்திடலாம். கடவுளே எங்கயும் traffic jam ஆகிடக்கூடாது. தூக்கம் கண்களைத் தழுவியது.

ஜன்னலில் இருந்து பனிக்காற்று காதோரமாய் ஊசிபோல் குத்தியதில், தூக்கம் கலைந்து, கண்கள் திறந்தேன். உடம்பு வலி பின்னியது. இடுப்பு வலியும் கொஞ்சம் இருந்தது. நீட்டி நெளிந்து சோம்பல் முறித்தேன். மணி 12.30தான் ஆகி இருந்தது. பனிக்காற்றைத்த் தடுக்க, ஜன்னலை மூடி சற்றே திரும்பினேன். அட………..என்ன ஆச்சரியம், என் பக்கத்துல ஒரு பெண். அடடா, மனசு கொஞ்சம் வேகமா துடிக்குதே. ஆச்சரியமா இருக்கு. எப்படி தயக்கமில்லாம ஒரு பொண்ணு என் பக்கத்துல தைரியமா உட்கார்ந்திருக்க. பொதுவா பெண்கள் தனியா வந்தா ஏதாவது ஒரு ladies பக்கத்துலதான் போய் உட்காருவாங்க. இது என்ன அதிசயமா இருக்கு. என்னோட ஆச்சரியத்தை வெளிக்காட்டாமல் இருக்க, ரொம்பவே மெனக்கெடரேனோ…அவளும் தூங்கிட்டுதான் இருகறா. காதுல ipod மாட்டி இருக்கறா..ரொம்ப அழகா இல்லாட்டாலும், முகம் தீர்க்கமாய் இருக்குதே..ச்ச, ஏன் என் புத்தி இப்படி யோசிக்குது…அமைதியா, இயல்பா படுத்து தூங்குனு மனசு சொல்லுதே. ஹ்ம்ம், முனாடி இருக்கர seat-லயும் யாரோ ஒரு பொண்ணுதான் உட்கார்ந்திருக்கரா. ஓ, வேறா எங்கயும் seat இல்லாததுனால என் பக்கத்துல உட்கார்ந்திருக்காலோ. என்னவா
இருந்தா என்ன, பெண்கள் இவ்வளவு சகஜமா மாறியிருக்கறது எவ்வளவு பெரிய விஷயம், நல்ல முன்னேற்றம்தான். மறுபடியும் சாய்ந்த்து தூங்க ஆரம்பிச்சேன். ஹ்ம்ம்….இருந்தாலும் மனசு ஒப்பலயே, இந்த பெண்ணை பார்த்துட்டே இருக்கனும்போல இருக்கு, அந்த நிலா மாதிரி…டேய்ய்ய்ய்ய், என்ன சிந்தனை இது, ஒரு பொண்ணு பக்கத்துல இருக்கக்கூடாதெ, நிலவு, மலருன்னு ஓவரா கற்பனை பன்ன ஆரம்பிச்சிடுவியே, கொஞ்சம் உணர்ச்சிகளை கட்டுஒப்படுத்து…மனசு திட்டியது என்னை. இர்ந்தாலும் உடம்பு வலி பாடாய்த்தான் படுத்தியது. Bus-ல விழுகுற சன்னமான நீல நிற விளக்குளகூட, முகம் அழகா பதிவாகுது மனசுல…..சரி சரி…தூங்கிடுறேன்…..

முகம் முழுதாக வியர்த்து ஒழுக ஆரம்பித்ததில், உஷ்ணத்தின் வேகத்தில், மறுபடியும் விழித்துக் கொண்டேன். கழுத்தி தொட்டுப் பார்த்த்தில், கொஞ்சம் காய்ச்சல் இருப்பதாஇ தோன்றியது. உடம்பு வலி கொஞ்சமும் குறையவில்லை. மணி பார்தேன். 1.30 தான் ஆகி இருந்தது. பாட்டுச் சத்தம் காதைப் பிளந்தது… Bus எங்கயோ நிற்பதுபோல் இருந்தது. எட்டிப் பார்த்தென். எதோ ஒரு Motel-ல் நின்றிருந்த்தது. எந்த ஊர் வந்திருக்கோம்..இறங்கிப் பார்க்கலாமா? யோசித்தபோது, இறங்கக்கூட முடியவில்லை. அவசரமாய் இய்யற்கையின் அழைப்பு வேறா பாடாய்ப்படுத்தியது. கஷ்டப்பட்டு எழுந்திருத்தேன். அப்போதுதான் ஞாபகம்…அட, அந்த பொண்ணு எங்க போன? அவளும் இரங்கி இருப்பாலோ? சரி வந்து பார்ப்போம். இறங்கினேன். சக்தி மோடல்…மாமண்டூர்….ச்சே, இவ்வளவு தூரம்தான் வந்திருக்கோமா? அலுப்புத்தட்டியது. இந்த நேரத்துலயும் நிறைய பேர் டீ குடித்துக்கொண்டிருந்தார்கள். எப்படித்தான் முடியுதோ? ஏதோ அச்சரியமாய், மனதும் உடலும் பாரமாய், toilet நோக்கி நடக்க ஆரம்பித்தேன். எல்லாரும் ரோட்டிலேயே கழித்தார்கள், எனக்கு ஏனோ பிடித்தமில்லை. கொஞ்சம் உள்ளே தள்ளிதான் இருந்தது. போர பாதை ஒரே
முள்ளுக்காடாய், காட்டுச் செடியுமாய் புதராய் காட்சியளித்தது. “ஆண்கள்” என எழுதியிருந்ததில் மட்டும் மங்கலான வெளிச்சம். ஒரு ரூபாய் வசூல் பண்றாங்க ஒவ்வொருத்தர்கிட்டேயும், இங்க எத்தனை பேர் வர்றாங்க, கொஞ்சம் இந்த பாதை எல்லாம் சீர்படுத்தினா, ரோட்டில் யாராவது போவங்களா, சுகாதாரமா வச்சிருக்கறது அவ்வளவு கஷ்டமா? இதெல்லாம் யாரு கேக்கறா, அவன் அவனுக்கு வர்ற அவசரத்துல, இதையெல்லாமா தட்டிக் கேக்கப் போறான்?…ஹ்ம்ம், என்னோட அவசரத்தை ஒரு வழியாக முடித்துக் கொண்டேன். மறுபடியும் bus-ல் ஏறினேன். ஓஓஒ…அந்த பொண்ணும் அங்கதான் போயிருப்பா போல, வரட்டும், வந்ததும் கொஞ்சம் எதாவது பேச்சு கொடுக்கலாம். என்ன பேருன்னாவது கேக்கலாம். முடிவுடன் சாய்ந்தேன்.

அட, அந்த பெண் அவசர அவசரமாக, என்னை நோக்கிதான் வருகிறாள். ச்ச, பின்ன அவளுடைய seat-இ பார்த்தா உன்னை பார்த்த மாதிரிதான் இருக்கும். உனக்கு ரொம்பதான் கற்பனை. திட்டுதே எதுவோ….ஒரு சின்ன சிரிப்பு..ஏன் இவ்வளவு பரபரப்பாய் இருக்கிறாள். என்ன ஆச்சுன்னு கேக்கலாமா?

“Excuse Me..” தொண்டையை இருமினேன்….அவளைப் பார்த்து ஆரம்பிப்பதற்க்குள்,
“”Hello….” அட, அவளே ஆரம்பிக்கறாளே…
“Hai, i am shakthi” ….
நான் என் கைகளை நீட்டினேன்…”i am Shankar…” பெருமையாய் சொல்கிறேன். பெயர் பொருத்தம் இருக்கிறதே….மனசு குதிக்குது…ஒரு பொறி தட்டுது….நம்ம ஆச்சிகூட புலம்பினாலே சக்தின்னு, ஒரு வேலை இவளா இருக்குமோ….ச்ச, மூளை எப்படி எல்லாம் யோசிக்குது ஒரு நிமிஷத்துல. என்ன சொல்ல வரான்னு கொஞ்சம் கேளேன்….
“ஒரு சின்ன உதவி. நான் கொஞ்சம் அவசரமா போகணும், ஆன அந்த toilet பக்கம் போனப்ப, அங்க token போடற ஆள் சரியா இல்லாதது மாதிரி தெரிஞ்சுது. உள்ள இருக்கறவங்களை அவன் எட்டிப் பார்க்க முயற்சி பண்றது நல்லா தெரியுது..என் கூட வந்து, கொஞ்சம் என்னன்னு கேக்கறீங்களா?” கண்களில் ஒரு எதிர்பார்ப்புடன் என்னை வேண்டினாள்….

கண்ணியர்கள் கண்ணசைத்தாள் காளை மனம் பொருத்திடுமோ-ங்கறது மாதிரி, எனக்கு பயங்கர வீரம் வருதே…
“அப்படியா, என்ன நடக்குது…கொஞ்சம் கூட decency இல்லாத மனுஷங்க, பொருக்கி பசங்க! இப்படியா நடந்துகிட்டான், யாருன்னு காட்டுங்க, நான் கூட வர்றேன்.” பேசிக்கொண்டே எழுந்தேன். உடம்பு வலி குறைந்து, நரம்புகள் முறுக்கேறியது.
“இந்த மாதிரி ஆளுகளையெல்லாம் சும்மா விடக்கூடாது. இன்னிக்கு ஒரு கை பார்த்திடலாம், வாங்க..” கத்திக்கொண்டே நடந்தேன். Bus driver வண்டிக்குப் பக்கத்துலயே நின்னுட்டு புகை பிடித்துகொண்டே என்னை உற்றுப் பார்த்தார். பொண்ணைப் பார்த்ததும் ரோஷம் வருது போலிருக்கு-ங்கற மாதிரியான பார்வை.ஏன் அப்படி பார்க்கறாருன்னு தெரியலையே..என்னவா இருந்துட்டுப் போகட்டும். யாராக இருந்தாலும் இப்படி செய்வது தப்புதான், அதை தட்டிக்கேட்க ஒரு வாய்ப்பு வரும்போது, கண்டிப்பா கேக்கணும், மனசு ஆறுதல் படுத்தியது.

“நானும் இப்பதான் போய்ட்டு வந்தேன். போகும்போதே நினைச்சுக்கிட்டேன், ஒரே முள்ளுக்காடும், காட்டுச்செடியுமா இருக்குதே இந்த இடம், எப்படி ladies வருவாங்க-ன்னு, யாராவது பின்னாடி நின்னாக்கூட தெரியாது,,,,, அந்த மாதிரி கட்டி வச்சிருக்காங்க பாருங்க, அதுவும் ladies toilet room, gents toilet room-க்கு பின்னாடி வேற இருக்கு. ஒரு சுத்து சுத்திதான் அந்த சுவரு வருது…. கட்டுறவனுக்கு கொஞ்சமும் புத்தியில்லை….” நான் பாட்டுக்குப் பேசிக்கொண்டே நடந்தேன். அவள் எதுவும் பேசவில்லை.

அருகில் வந்ததும், “அதோ அந்த ஆளுதான்” கை காமித்தாள். குள்ளமாய் ஒருவன் குல்லா போட்டுகொண்டு, சில்லறைக் காசை எண்ணிக் கொண்டிருந்தான். அவன் முகம் முழுதாக தெரியாவிட்டாலும், பார்ப்பதற்க்கே எரிச்சலூட்டுவனவாய் இருந்தது, அவன் தோற்றம்.
“நீங்க இங்கயே இருங்க ..நான் போய் கேட்டுட்டு வர்றேன்…” கோபமாக அவனைப் பார்த்துக்கொண்டே போனேன்.
“Hello, உன் மனசுல என்னய்யா நினைச்சுட்டு இருக்க? இவ்வளவு கேவலமா ஏன் நடந்துகிற? அறிவுகெட்ட நாயே…” வார்த்தைகள் சுளீரென்றே விழுந்தது. “மானங்கெட்ட பயலே, எப்படிடா மனசாட்சி இல்லாம இப்படி எட்டிப் பார்க்கிற? ” அவன் சட்டையைப் பிடித்து chair-லிருந்து அவனை இழுத்தேன்.

நிலைதடுமாறி பேசினான், “யோவ் யாருய்யா நீ, கையை எடு முதல்ல, சட்டையிலிருந்து கையை எடு…” திமிறினான்.
நான் விடுவதாக இல்லை. என்னையும் எதிர்பாராமல் என் கைகள் அவனை அறைந்தது. பளாரென ஒரு அறை. “உன்னை இப்படியே விடக்கூடதுடா, போலீஸ்ல புடிச்சுக்குடுத்தாதான் அடங்குவ நீ….நீதான் இங்க contract-ஆ, இல்ல உனக்கு மேல எவனாவது இருக்கானா, அவனையும் கூப்பிடு…” மறுபடியும் இறுக்கமாக பற்றினேன். அவன் கண்களில் ஒரு மிரட்சி. அவளைத் திரும்பிப் பார்த்தேன். பதற்றத்தோடு என்னருகில் வந்தாள்.

‘வேண்டாம் விட்டுடுங்க..ப்ளீஸ்…அடிக்கற அளவுக்கு வேண்டாம்….நாம இங்கிருந்து போகலாம்….”
அவள் வார்த்திகள் என்னை இன்னும் முரடாக்கியது. “பாரு, அவங்களுக்கு இருக்கற ஒரு மனுஷத்தன்மை உனக்கு எங்க போச்சு…” அவன் எங்கயோ தேடினான். என்னைத்தான் திரும்பவும் பார்க்கிறான்.
“டேய், சாவுகிராக்கி, எவ்வளவு தைரியம் உனக்கு, பேசிட்டு இருக்கும்போதே மேல கைவைக்கிற, எங்களுக்கும் தெரியும்…” ஆத்திரமாய் அவன் கத்தினான்..”யேய், செல்வா, தமிழ் அண்ணே….” அவன் பங்குக்கு ஆட்களைத் திரட்ட ஆரம்பித்தான்.
என் கோபம் தலைக்கேறியது, மீண்டும் பளாரென ஒரு அறை, அறைந்ததில் என் கைகள் சுளீரென வலித்தது…..நிலைதடுமாறி கீழே விழுந்தான்.

அவள் என்னைப் பிடித்து இழுத்துச் சென்றாள். என் வெறி அடங்கவே இல்லை.
“தயவு செய்து நான் சொல்றத கேளுங்க….இங்கிருந்து போய்டலாம். வாங்க…யாரவது வந்தாங்கன்னா பெரிய பிரச்சனை ஆகிடும்..” தரதரவென என்னை இழுத்துச் சென்றாள். நான் அவனை அடிப்பேன் என எதிர்பார்த்திருக்க மாட்டாள் போலும். நானும் தான்…”நீங்க விடுங்க என்னை. இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது. நீங்க பயப்படாதீங்க”..அவள் பிடியை விலக்க நினைத்தேன். முடியவில்லை. என்னை சமாதானப்படுத்திக்கொண்டே போனாள். “சொல்றத கேளுங்க ப்ளீஸ்…பாருங்க bus கிளம்புது…”
அட, ஆமாம்…நான் கைகாட்டி, நிறுத்தி ஏறினேன்…அவளும் ஏறிவிட்டாள். கொஞ்சம் அமைதியானேன். மடமடவென தண்ணீர்…என்னை அப்படியே உற்றுப் பார்த்தாள். “ரொம்ப நன்றி. மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நீங்க நடந்துகிட்டீங்க. உங்களை மாதிரி தைரியமா நான் யாரையுமே பார்த்ததில்லை.” அவள் வார்த்தைகளை, உண்மையாய் மனசிலிருந்து சொல்வதுபோல் இருந்தது.

“ச்ச, அதெல்லாம் இல்லீங்க, பெரிய வார்த்தை எதுவும் சொல்லாதீங்க, எல்லாருக்கும் இந்த பொருப்புகள் வேணும். இந்த மாதிரி ஒரு அவலத்தை, நீங்க சொல்லாம, நானே நேர்ல பார்த்திருந்தா, விளைவு இதை விட மோசமா இருந்திருக்கும்.இது ஒரு கேவலமான நடத்தை.” நான் ஏதோ
சாதித்ததைப் போல பேசினேன். கொஞ்சம் சத்தம் அதிகமாக இருக்கிறதோ, எல்லாரும் ஏன் என்னையே பார்க்கிறாங்க? ச்ச, நல்ல வேடிக்கை மட்டும் பார்க்கிறாங்க, தட்டிக் கேட்க முதுகெலும்பு இல்லாதவங்க…மனசு திட்டியது.
“மறுபடியும் ரொம்ப நன்றி, உங்க தூக்கத்தை நான் disturb பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். அமைதியா மறுபடியும் தூங்குங்க நீங்க.” அமைதியாகப் பேசினாள்.
“நீங்க மதுரையில எங்க போகணும்….” கேள்வியை முடிப்பதற்க்குள் மறுபடியும் காதில் headphone மாட்டினாள். அட, எவ்வளவு இயல்பாய், எதுவும் நடக்காததுபோல் கண் மூடுகிறாளே…ஆச்சரியமாய் இருந்தது எனக்கு. சரி சரி, ரொம்ப பேசினாள், அப்பறம் என்னையும் அவனை மாதிரி நினைத்து
விடப் போகிறாள், இறங்குவதற்க்கு முன் எப்படியும் பேசுவாள், அப்ப கேட்டுக்கலாம்…நானும் சமாதானமாய், பொய்யாய் மீண்டும் கண்களை மூடினேன்.

வெயில் சுள்ளென்று கைகளில் உரைத்தது. மெல்ல மெல்ல சுய உணர்வுக்கு வருகிறேன். ஹ்ம்ம்…பெரிய சோம்பல் முறித்தேன். அட, உடம்பு வலி கொஞ்சமும் இல்லயே, என்னடா இது, நைட் அப்படியே அடிச்சு போட்ட மாதிரி இருந்தது, இப்ப என்னடான்ன, அந்த மாதிரி வலிக்கான அறிகுறி எதுவுமே இல்லையே. பரவாயில்லை. எப்படியோ போய்டுச்சே. நல்லதுக்குதான். பசிக்க ஆரம்பித்தது…..அட, கண்கள் தானாக பக்கத்து seat-கு
போகிறது…ஹ்ம்ம்ம்…..அந்த பொண்ணு இல்லையே..ஒருவேளை இறங்கி இருப்பாளோ. bus எங்க வரைக்கும் வந்திருக்கு, பார்வைகள் வெளியில் தளர்ந்தன.ஹ்ம்ம்….மேலூர் வந்திடுச்சா, இன்னும் ஒரு 10 நிமிஷம் பெரியார் bus stand வந்திடும். இறங்கினதும், சொளந்தரை வரச் சொல்லிடவேண்டியதுதான். இப்ப இருக்கற பசியில, நடந்து போர அளவுக்கு தெம்பு இல்ல. ச்ச, என்ன பொண்ணு இவ, இறங்கறதுக்கு முன்னாடி சொல்லிட்டுப் போக வேண்டாம், atleast ஒரு thanks-ஆவது, சொல்லி இருக்கலாம். நைட் அவளுக்காகத்தானே உடம்பு வலி கூட பார்க்காம, போய் சண்டை போட்டோம். அந்த நன்றிக்காகவாவது சொல்லி இருக்கலாம். ஹ்ம்ம், இவளைப் போய் கொஞ்சம் பெருசா நினைச்சிட்டோமே. இந்த காலத்துல யாருக்குமே ஒரு நன்றியே இல்லை. மனசு அவளைத் திட்டத்தான் செய்தது. seat-லிருந்து எழுந்திருத்து, என்னோட bag-ஐ எடுத்தேன். மறுபடியும் எல்லாவற்றையும் எடுத்துட்டோமான்னு ஒருமுறை சரிபார்த்துக் கொண்டேன். இருந்தாலும் நினைப்பு அவளைச் சுற்றியே வந்தது. அவள் எங்க இறங்கியிருப்பாள் என ஒரு ஆர்வம் மனசுக்குள்ள வந்துட்டே இருக்கு. இறங்குவதற்க்கு ஆயத்தமானே.

முன்னாடி சென்றேன். Conductor அருகில் நின்றேன். தயக்கமாய் பேச்சை ஆரம்பித்தேன். “பெரியார் bus stand-கு முன்னாடி வேற என்ன என்ன stoping போயிருக்கு,? சொதப்பாமல் சுருக்கமாய் கேட்டு முடித்தேன். என்னை ஏற இறங்க பார்த்தார். ஏதோ அவசரமாக, எழுதிக்கொண்டிருந்ததில்,
“ஏற்கனவே bus late-ல ஓடிட்டு இருக்கு, இதுல எங்க முன்னாடி பின்னாடி நிறுத்தறது, நேரா பெரியார் bus stand தான். முதலும் கடைசியுமா அங்கதான் நிக்கும். வேற எங்கயும் நிக்காது…” வெடுக்கென்ற பதில்.

ஒரு நிமிடம் அதிர்ந்து போகிறது உள்ளம். துடிப்பதை வேகப்படுத்தியது இதயம். பின்னாடி திரும்பிப் பார்த்தேன், பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை, காலியான 4 seat-ம் அப்படியேதான் இருந்தது. அப்படின்னா, யாரும் இறங்கியிருக்க வாய்ப்பில்லை. தடக் தடக்…bus ஒரு speed breaker-ல் ஏறி இறங்கியது. Bus குலுங்கியதில், என் bag-இன் பிடி அப்ப்டியே இழந்தேன்.
Driver-ரிடம் பேச்சைத் தொடர்ந்தார் conductor..”கடைசிவரைக்கும் நாலு seat காலியா waste-ஆகிடுச்சு இந்த trip-ல….எந்த டிக்கட்டும் ஏறாம கழுத்தறுச்சுப்பா….போ…”

அதிகாலையிலும் எனக்கு வேர்த்தது. மனசு திக்திக்னு அடிக்குதே…என்ன நடக்குதுன்னு ஒன்னுமே புரியலையே…அவளை நினைத்தாள், முதுகுத்தண்டில் கத்தியால் கீறுவதுபோல் இருக்குதே… ” periyar bus stand வந்திடுச்சு, எல்லாரும் இறங்குங்கப்பா, இதான் கடைசி stopping…இறங்குங்க…” conductor பேசிக்கொண்டே இறங்கி ரிவர்ஸ்-க்கு signal கொடுக்க ஆரம்பித்தார். எல்லோரும் என்னை நோக்கி இறங்க வருகிறார்கள்…

அப்படியே உரைந்து போனேன். என் பக்கத்துல அப்போ உட்கார்ந்திருந்தது யாரு? நான் யாரிடம் பேசிக்கொண்டு வந்தேன்? எதற்காக சண்டை போட்டேன்? நிஜமாவே சண்டை போட்டேனா, இல்ல ஏதாவது கெட்ட கனவா? ஏன் என் மனசு வளைப்பத்தியே சிந்திக்குது? ஏன் எனக்கு பதற்றமா இருக்கு? நிலை கொள்ளாமல் இறங்கினேன். சிகரெட் புகை குப்பென்று மஎுகத்தில் படிய, திரும்பிப் பார்த்தேன்…திட்டத் தோன்றவில்லை..

“அண்ணா, அண்ணா,….” யாரோ கைதட்டும் சத்தம்….என்னைத்தானோ? பார்வையைத் திருப்பினேன்…..அதோ…சொளந்தர் வருகிறான். என்னைப்
பார்த்து கையசைத்தபடி….”அண்ணா, இங்க இருக்கேன்…இதோ வர்றேன்…” என்னை நோக்கி வந்தான். அவனுடைய சிரிப்புக்கு பதில் புன்னகை தர முடியவில்லை. “அப்பாடா, ஒரு வழியா நீ வந்து சேர்ந்துட்ட.” சொளந்தர் நிம்மதி பெருமூச்சு விட்டான். ” ஏண்டா, என் அப்படி கேக்கற? சரியான நேரத்துக்கு தானே வந்திருக்கிறேன்.?”
“என்ன டைம் பார்க்கலையா நீ, 10 30 ஆகிடுச்சு. 7 30-க்காவது நீ வர வேண்டியது. மூணு மணி நேரம் தாமதம். அம்மா அங்க புலம்பிட்டு இருக்காங்க. என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு, எல்லாரும் பதற்றமாதான் இருக்காங்க.” சொளந்தர் பேசிக்கொண்டே போக, அதிர்ச்சியில் watch-ஐப் பார்த்தேன். ஆமாம், மணி 10 40 ஆகி இருந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
“என்னடா ஆச்சு? ஏன் எல்லாரும் பதற்றமா இருக்காங்க?”
அவனிடம் கேட்டேன்.

“அட நீ வேரண்ணா, பாலா சித்தி phone பண்ணி இருந்தாங்க, அசோக்கும் இன்னிக்குதான் சென்னையிலருந்து வரானாம். உன் bus-ஐவிட அரை மணி நேரம் தள்ளி அவன் bus. அதுவும் லேட்டாதான் எடுத்திருக்காங்க. என்ன தெரியுமா, அவன் bus-ஐ மாமண்டூர்-ல அப்டியே நிறுத்திட்டாங்களாம். எவனோ ஒரு toilet contractor, நாத்தம் புடிச்சவன், நேத்து night செத்துப் போயிருக்கான். எப்படி செத்தான்னு தெரியலையாம். யாரோ அடிச்சு போட்ட மாதிரிதான் இருக்காம், ஆனா, எந்த தடயமும் இல்லையாம், எந்த காயமும் இல்லையாம். சரியா என்னன்னு
தெரியலையாம். அதனால, அங்க பெரிய கலேபரமா இருக்காம். அங்க வந்திருந்த எல்லா bus-யும் போலீஸ் வர்ற வரைக்கும் அப்படியே நிறுத்திட்டாங்களாம். எப்ப எடுப்பாங்கன்னு தெரியலைன்னு சித்திக்கு தகவல் சொல்லி இருக்கான்.”

என்னைப் பார்த்துதான் பேசிக்கொண்டிருக்கிறானா? கண்களில் சூடேறியது….அவன் பேசுவது, பாதிப்பாதி தான் எனக்குக் கேட்கிறது….

“சித்தி பயந்து போய், அம்மாக்கு போன் பண்ணி கேட்டுட்டாங்க. அம்மாவும் பயந்துட்டாங்ல. உன்கிட்ட இருந்து ஒரு தகவலும் இல்ல வேற, நாங்க பண்ணாலும் உனக்கு reach ஆகலை, காலையில இருந்து, அம்மா பாவம், உன்னை எதிர்பார்த்துட்டே இருக்கா. நான் உன்னை கூட்டிட்டு வர்றேன்னு இப்போதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கிளம்பினேன். Depot-ல உன் பஸ் எப்ப வரும்னு விசாரிச்சப்பதான் சொன்னாங்க, ஏதோ bus puncture ஆகிடுச்சாம், அதான் லேட்-ஆம் …என்ன நீ, நீ சொல்ல வேண்டியது எல்லாம் , நான் சொல்லிட்டு வர்றேன், நீ ஒன்னுமே பேசாம வர்ற….” சொளந்தர் பேசப் பேச, உரைந்து போனேன்……..கைகள் நடுங்க, மருபடியும் கண்களிலிருந்து, உடம்பும் சூடானது, எல்லாம் மங்கலாய்த் தெரிகிறது….அம்மா….அம்மா…..

ஆ …ஆ…..உடம்பு வலியில் கண்கள் மெல்லத் திறந்தேன்…”என்னப்ப, முழுச்சிட்டியா, இப்ப எப்படி இருக்க? உன்னோட வேலை எல்லாம் முடிஞ்சிதாப்பா?” செம்பா ஆச்சி ஏதோ கேட்பதுபோல் இருந்தது, கண்களை சுழற்றினேன்…வீட்டில் என் படுக்கையில்….பக்கத்தில், என் செம்பா ஆச்சி என் தலையை வருடிக்கொண்டிருந்தாள்…..”எல்லாம் நல்ல படியா நடக்கும். அந்த சக்தி உன் கூடவே இருப்பா, ….அயுசுக்கும்…” பாட்டி
சிரித்து, மடித்து வைத்திருந்த விபூதியை என் நெற்றியில் வைத்தாள்.

மழைக்காலத்து நினைவுகள்…

•டிசம்பர் 9, 2008 • 1 மறுமொழி

42-17363582
மழைக்கும் எனக்கும்
உறவென்ன எனத் தெரியாது.
ஆனால்,
நம்மை
உறவாக்கியதற்கோ என்னவோ,
மழையும்,
உன் நினைவுகளும்
எப்போதும் இனிமையே….

குடையின்றி நடந்த
ஒரு தனிமைப் பயணத்தில்,
உன்னுடன் பகிர்ந்த
ஒரு குடையின் நெருக்கம்,
நம் தயக்கத்தை நிச்சயமாய்
உடைத்திருக்கக் கூடும்.
ஓரிரு வார்த்தைகளின்
பரிமாற்றம்,
அந்த மழையிரவில்
பூத்த பூக்களாய்,
புதிதாய் பலவாய்
அன்று முதல்தான்
மலர்ந்திருக்ககூடும்.

குடைபிடித்தது மழைக்குத்தான்
நமக்கில்லை என்பதுபோல்,
இருவரும் நனைந்தது,
வீடடைந்தபின்தான் தெரிந்தது.
அந்த முதல் வெட்கமும்
காற்றோடு மழையாய்,
கரைந்து போனதற்காய்,
இன்றும் என்னைப் பார்த்துச்
சிரிக்கும்
இந்த பொல்லாத மழை.
மறுநாளும்
பெய்யெனப் பெய்யாதா
மாமழையென,
மறந்துபோனேன் போல்,
மறுத்து வைத்து வந்தேன்
என் குடையை…
உன்னுடனான குடைப்பயணம்,
மீண்டும் தொடரவேண்டுமென…

இன்னொரு கார்காலத்தில்,
நம் இருமனம்
திருமணமான காலத்தில்,
சில்லென்ற காற்று,
பரவவிட்ட குளிருக்காய்,
நான் இழுத்துப் போர்த்திய
சேலைத் தலைப்பின்
அணைப்பிற்காய்,
நீ ஏங்கியதும்,
நான் கள்ளச் சிரிப்பும்
கலவித் துடிப்புமாய்
காதல் கொண்டதற்காய்,
இன்றும்
என் உள்ளங்கையில்
முகம் புதையும்.
அந்த நேசத்தின்,
சுவாசத்திற்கேனும்
நான் மழைக்காதலி ஆனேன்.

இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளும்
உன் மழைக்காலத்து
நினைவு சொல்லியே
கடக்கையில்,
நிச்சயமாய் தோன்றியது,
மழையும்,
உன் காதலும்,
என்றுமே
மழையில் நனைந்த
இலைகளாய்,
பசுமையாய்
மனதை நிறைத்திருக்கும்
எப்போதும்.

ஏன் பிரிந்தாய் எனை?

•நவம்பர் 25, 2008 • கருத்துத் தெரிவிக்கவும்

sadness

பிரிந்திடும் நேரத்தில்
நான் அறிந்திடவில்லையே..
வெறும் வானம்தான் நானென்று,
அதன் நீலமோ நீயென்று,
இன்று உன் நினைவுகள் மேகமாய்,
என்னைத் தழுவிடும்போதெல்லாம்,
மழையாய் அழுகிறேன்,
வெறுமையாய் நான் உணர்கிறேன்,
கவிதையைத் தேடி அலைகிறேன்,
உனக்குள் தொலையத் துடிக்கிறேன்.

ஒரு கணம் தோன்றுமே,
நீ அருகினில் இருப்பதாய்,
உயிர் வலி கொல்லுமே,
நீ விலகியே நிற்பதால்,
மறுபடி தோன்றினால்,
என் மலர்விழி கொள்ளுமாய்,
கண்ணீராய் நிரம்பிவா,
பெண் நீராய் உருகினேன்,
கானல் நீராய் கனவுதானோ?
நான் கலையாதிருக்கும் வானம்தானோ?

புதிய காலை…

•நவம்பர் 13, 2008 • 1 மறுமொழி

42-17132275
விடியற்காலை ஐந்து மணிக்குத்தான்
பிறக்கிறேன் ஒவ்வொரு நாளும்.
பனித்துளிக்குள் அடைபெற்ற நீராய்,
வாழ்க்கை ஒரு தினத்துள் அடங்கிடுமென,
புரிவதற்க்குள் முடிந்திடும்
இந்த காலை.

இயன்றதை செய்ய முண்டியடிக்கும்
ஒவ்வொரு முயற்சியையும்,
இயலாமை தள்ளிப்பார்க்கும்.
முடிவுகளில்லா தொடக்கங்கள்
அப்போது சிரித்திருக்கும்.

தோல்விகள் சீண்டிப்பார்க்கும்,
சிலசமயம்,
நம்பிக்கை தோள்கொடுக்கும்.
கடந்தகால அறிவுரைகள்
அறிவிப்பில்லாமல் வந்துசேர்கையில்,
தவறுகள் அழகாய் அரங்கேறியிருக்கும்.
நாளைக்காய் சேமித்துவைக்க
தோல்வியின் பாடங்கள்
மீண்டும் அறிவுரையாய் போய் தூங்கும்.

என்றைக்காவது கிட்டிவிடும் வெற்றியும்
அன்றைய நாளின்
முடிவுனூடே மறைந்துவிடும்.
அடுத்த புதிய நாளில்,
பரிச்சயமற்றவனாய் கையசைத்துச் செல்லும்.
மீண்டெழுந்து யோசித்துப்பார்க்கையில்,
ஒரு நாளைய வெற்றி என்பது,
பிறர் மனம் வாடாமை,
தீயவை தீண்டாமை மட்டுமே.

இதோ, நான் மடியும் நேரம் நெருங்கிவிட்டது,
மீண்டும் பிறப்பேன்,
தோல்விகண்டு துவளாமல்,
வெற்றியோடு மகிழாமல்,
முயற்சி மட்டுமே சொந்தமாய்,
நான் மீண்டும் பிறப்பேன்,
நாளைய புதிய விடியலில்.

காதல் கொண்டேன்….

•நவம்பர் 6, 2008 • 2 மறுமொழிகள்

 kadal-konden14

காதல் கொண்டேன்
நான் காதல் கொண்டேன்,
கனவுகள் தறித்து,
உன் நினைவுகள் சுமந்து,
காதல் கொண்டேன்
நான் உன்னிடம் கைதுதான் ஆனேன்.

ஒற்றை பனித்துளியால் நனையும்
ஒரு கோடி இலைகள்போல்
உன் கற்றை பார்வையால்
நான் கரைந்தேதான் போனேன்..
இப்போது காதல் கொண்டேன்
நான் புது இதயம் செய்தேன்.

மழையறியாத மீன்களாய்,
உன் நிழல் தெரியாது வாழ்ந்திருந்தேன்,
இன்று உன் மனம் அறிந்தேன்
என் கடல் கடந்தேன்.
காதல் கொண்டேன்
நான் புது உயிராய் ஆனேன்.

கேள்விகளுக்கடங்கா என் கர்வம் உடைத்து,
என் இயல்புகள் தொலைய வைத்த,
கேள்வியின் நாயகி உன் மேல்,
காதல் கொண்டேன்
நான் காற்றாய் மிதந்தேன்.

தேவதை வரம்தருவாள்,
ஒரு நாள் உன் கரம்பிடிப்பாள் என,
அம்மா சொன்னது புரிந்தது,
அம்மாவும் தேவதைதான்,
உன் வரவு தெரிந்திருக்கும்போல்
வியப்புகள் விண்ணைமுட்டுமுன்,
என் விழிகள் நிரப்பிய உன் மேல்,
நான் காதல் கொண்டேன்,
இப்போது கடவுள் ஆனேன்.

இப்படி நான் காதலில் விழுவேன் என,
சற்றுமுன் வரை நினைத்ததில்லை,
இந்த நிமிடம் புரட்டிப்போட்டதே,
இது தேவலோகமோ என்ன விந்தையோ,
கோடி வருடங்கள் தாங்கிய ஒரு நொடி
இந்த நொடி, உன்னோடு
கோடி முறை வாழ்ந்ததாய் தோணுதே
நிச்சயமாய் நான் காதல் கொண்டேன்
மானுடத்தின் யுகங்கள் கடந்தேன்.

 

 

விவாகரத்து…

•அக்டோபர் 20, 2008 • கருத்துத் தெரிவிக்கவும்

தொலைந்துதான் போனேன்
இத்தனை நாளாய்.
நீயென்று நான் இருந்ததினால்,
உன் நிழல் தாங்கி
நான் நடந்ததினால்,
என் பாதச் சுவடுகளின்றி
தொலைந்தேதான் போனேன்….

இண்றுதான் தெரிந்தது,
நீ நீயென்று,
நான் நானென்று.
உன் பாதை வேறு,
என் பயணம் வேரென்று!!

புரியாமல் பயணித்ததற்கா
இவ்வளவு பெரிய தண்டனை?
முன்பே சொல்லி இருக்கலாம் நீ,
என் வரவு உனக்குப் பிடித்தம் இல்லையென,
உன்னை விரும்பாமலாவது
இருந்திருப்பேன்,
இப்படி இறந்திருக்க மாட்டேன்.
என் அழுகையாவது
இந்த பூமியை
நனைக்காமல் இருந்திருக்கும்!

பூக்கள் கேட்டதற்காய்
முட்கள் பரிசளிக்கிறாய்,
மணற்கோட்டை கட்டியதற்காய்
பேரலையாய் அடித்துச் செல்கிறாய்,
இன்று கிளிஞ்சல்கள் மட்டுமே மிச்சமாய்,
நான் கரையோரத்தில்,
நீ தொலை தூரத்தில்…..

விளக்கு

•அக்டோபர் 13, 2008 • கருத்துத் தெரிவிக்கவும்

விளக்கேற்றி பூஜைசெய்து
கடவுள் துதி பாடி
இறை தேடிய காலமெங்கே
என நான் வியப்பதுண்டு!
புரிந்திருக்குமே,
இப்போதெல்லாம் நான்
அப்படி செய்வதில்லையென…

காரணம் எதுவாயிருக்குமென
நான் யோசிப்பதுண்டு.
வாழ்க்கையின் ஓட்டமாக இருப்பின்
காலத்தின் மேல் பழியேற்றுவதாகும்!
துன்பமில்லாத வாழ்வியலாய் இருப்பின்
சுயநலமான சிந்தனையாகும்!
தன்னிறைவு காரணமாகின்,
ஆணவத்தின் உச்சமாகும்!
தேவையின்மை தோல் உயர்த்தினால்,
கடவுளும் தேவைக்குதான் என்றாகும்!!

தெரியவில்லை,
காரணம் எதுவாயிருப்பினும்,
புரிதல் ஒன்றுமட்டுமே,
கடவுள் சிந்தனையோ
வழிபாட்டு கோட்பாடுகளோ,
உள்ளத்தில் கள்ளமில்லாதவரை,
உயர்ந்தது நற்சிந்தனைகளே….

அம்மாவின் மன நிறைவுக்கு
அவ்வப்போது ஒளிர்விடும்
என் விளக்கின்
அமைதியான அந்த
புன்னகை மொழிவதும்,
மனதின் இருளகற்றி
நற்சிந்தனை ஒளியேற்றுவதே!

எங்கிருந்தாய்?

•அக்டோபர் 8, 2008 • 1 மறுமொழி

இத்தனை நாளாய் எங்கே போயிருந்தாய்…
கேள்விகள் ஆயிரம்!!
கவிதை எழுத நேரமில்லையென
பொய்யுரைப்பேனோ,
அல்லது
நானாக நானில்லை என்று
மெய்யுரைப்பேனோ?
எதுவென்று தெரியவில்லை…

காலத்தின் மீது பழிசுமற்றத்தான் போகிறேன்….
காட்டாற்று வெள்ளமாய்,
வாழ்க்கை அடித்துச் சென்ற வேகத்தில்,
சிறு படகாய்
நான் இப்போதுதான்
கரை ஒதுங்கியுள்ளேன்.
இதுவரை எவ்வளவு தூரப் பயணம்
எனத் தெரியவில்லை,
இன்னும் பாதை நீள்கிறது….

கவிதை எழுதும் முயற்சி மட்டும்
இருந்திருக்கவில்லை எனில்,
கவலையாய் போயிருக்கும்,
கடந்த கால் நினைவுகளின் பதுவுகள்
சுவடுகளின்றி மறைந்திருக்கக் கூடும்.

நினைவுகள் சுமந்து
கற்பனைகள் விரிந்து
மீண்டும் இந்தப் பயணம் ஆரம்பம்…
நேசத்தின் சுவாசம் முகர்ந்து,
வாழ்க்கையின் நீட்சி உணர்ந்து,
எல்லையில்லா பயணமாய்
தொடர்ந்து செல்வேன்…

தீபாவளி நல்வாழ்த்துகள்

•நவம்பர் 7, 2007 • 6 மறுமொழிகள்

diwali1.jpg

மத்தாப்பு பூச்சூட,
சரவெடிகள் தாளம் போட,
வானவேடிக்கைகள்
வின்மீன் பறிக்க,
தீயவைகள் தீயினில் கருக,
நன்மைகள் கோடி
தீபங்களாய் ஒளிர்விட,
இல்லம் எங்கும்
இன்பம் பொங்க,
என் இனிய
தீபாவளி நல்வாழ்த்துகள்.

கேள்விகள்

•நவம்பர் 6, 2007 • கருத்துத் தெரிவிக்கவும்

question11.jpg

கேள்விகள் ஒளிந்திருக்கும்
ஒவ்வொரு தருணமும்
கடினமானவைதான்!!

காலத்தின் கைகளில்
ஒப்படைக்கும்
கேள்விகள்,
விடையறியாதவை…

விடைகள் காத்திருக்கும்
கேள்விகளோ,
கேட்கப்படாமலேயே
காலத்தைக்
கடந்துவிடுபவை….

புருவங்கள் உயர்த்தி
விழிகள் உதிர்க்கும்
கேள்விகள்,
மனதினை தைப்பவை….

உள்ளத்தில் கள்ளமின்றி
மழலைகள் தெறிக்கும்
கேள்விகளோ,
விடையறிந்தும்
விளக்க இயலாதவை…

எண்ணற்ற கேள்விகள்,
ஒவ்வோர் மனதிலும்….
நியாயமானவை,
ஆதாரமற்றவை,
இயல்பானவை,
தேவையற்றவை,
சிந்திக்க வைப்பவை…
மொத்தத்தில்,
விசனப்படவே வைக்கின்றன
அத்தனை கேள்விகளும்!!